ரஜினிக்கு எதிராக சிரஞ்சீவி

‘ஹைதராபாத்தில் நடந்து முடிந்திருக்கும் பெரிய வீட்டு நிச்சயதார்த்தம் ஒன்று, ‘ரஜினி அரசியலுக்கு வருவார்’ என்பதை நிச்சயம் செய்திருக்கிறது’ என்பது தான் லேட்டஸ்ட் பரபரப்பு! கடந்த 24-&ம் தேதி ஹைதராபாத்தில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் மகன் யோகேஷ§க்கும் அவரது மைத்துனரும் பிரபல நடிகருமான பாலகிருஷ்ணாவின் மூத்த மகள் பிரம் மணிக்கும் நிச்சய தார்த்தம் நடந்தது. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்துதான் ரஜினி அரசியலுக்கு வரப்போவதாகப் பரபரப்புக் கிளம்பி இருக்கிறது.

சந்திரபாபு நாயுடு இல்லத்து வைபவத்தை மையமாக வைத்து இப்படி செய்தி கிளம்பி இருப்பதால், இதுபற்றி ‘தெலுகு தேசம்’ கட்சியின் சீனியர் தலைவர் ஒருவரிடம் கேட்டோம்.

‘‘ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பது இதுவரை விடை தெரியாத கேள்வியாகவே இருந்தது. என்.டி.ஆர். காலத்திலிருந்தே சந்திரபாபுவுக்கும், ரஜினிக்கும் நல்ல நட்பு உண்டென்றாலும், சமீபத்தில் அது வலுப்பெற்றிருக்கிறது. நாயுடுவிடம் ரஜினி நிறைய அரசியல் பேசுகிறார். அந்த அரசியல் சந்திப்புகள் சென்னையிலும் ஹைதராபாத்திலும் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன’’ என்றவர், நாயுடு வீட்டு நிச்சய தார்த்தத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசுவதைத் தவிர்த்து விட்டார்.

ஆந்திர மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் நம்மிடம் பேசும்போது, ‘‘ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அரசியலுக்கு வர வேண்டும், கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற கோஷம் ஆந்திரா முழுவதும் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. சிரஞ்சீவியின் சாதிக்காரர்கள் மாவட்டம்தோறும் தங்கள் சாதி சங்கக் கூட்டத்தைக் கூட்டி, ‘சிரஞ்சீவி அரசியலுக்கு வராதபட்சத்தில் கட்சியை நாங்களே தொடங்குவோம். அதன் தலைமைப் பதவியை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று தீர்மானம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். 2009&ம் ஆண்டு ஆந்திராவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், தான்தான் அடுத்த முதல்வர் என்று நினைத்திருக்கும் நாயுடுவுக்கு, சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம் தலைவலியைக் கொடுக்கும்.

சிரஞ்சீவி அரசியலுக்கு வந்தால் அது நாயுடு கட்சியின் ஓட்டையும், காங்கிரஸ் ஓட்டையும் பிரிக்கும். அவரது அரசியல் பிரவேசம் காங்கிரஸ§க்கு சாதகமாக இருக்கும். கிட்டத்தட்ட உங்கள் மாநிலத்தில் விஜயகாந்த் இரண்டு கழகங்களின் ஓட்டுகளைப் பிரிப்பது போலத்தான் இது. சிரஞ்சீவி அரசியலுக்கு வந்தால், அவரை எதிர்கொள்ள ஒரு சினிமா இமேஜ் நாயுடுவுக்கும் வேண்டும். இதற்காக இத்தனை காலமும் என்.டி.ஆர். குடும்பத்தை விட்டு ஒதுங்கியிருந்த நாயுடு, இப்போது என்.டி.ஆர். வாரிசுகள் அனைவரிடமும் தானே போய் சகஜமாகப் பழகி, அவர்களது அன்பைப் பெறும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்.

என்.டி.ஆரின் மூத்த மகன் ஹரி கிருஷ்ணா பிஸியான நடிகர். அவரது மகன் ஜூனியர் என்.டி.ஆர். இளைஞர்களின் எழுச்சி நாயகனாகத் தெலுங்குத் திரை யுலகில் வலம் வருபவர். சிரஞ்சீவிக்கு இணையாகப் பேசப்படும் இன்னொரு ஆக்ஷன் ஸ்டார், என்.டி.ஆரின் கடைக்குட்டி பாலகிருஷ்ணா. இதில் ஹரிகிருஷ்ணாவுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவியைக் கொடுப்பதாகச் சொல்லி, அவரையும் தன் பிடிக்குள் கொண்டுவந்து விட்டார் நாயுடு. இப்போது தன் மகனுக்கு பாலகிருஷ்ணாவின் மகளைக் கல்யாணம் செய்து கொடுப்பதன் மூலம் அவரையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டார்.

இதற்கெல்லாம் மேலாக ‘சிவாஜி’ மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய நடிகராக உருவெடுத்திருக்கும் ரஜினியையும் தன் நண்பராகக் காட்டிக்கொள்ளத் தொடங்கி இருக்கிறார். தன் மகன் நிச்சயதார்த்தத்துக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய வி.ஐ.பி&க்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருந்தார் நாயுடு. ரஜினி அந்த விழாவுக்கு வராவிட்டாலும், போனிலேயே மணமக்களை வாழ்த்தி இருக்கிறார். ஆரம்பத்தில் நெருங் கிய நண்பர்களாக இருந்து, பிறகு பரம எதிரிகளானவர்கள், நடிகர் மோகன்பாபுவும் சந்திரபாபு நாயுடுவும்.

இப்போது மோகன் பாபுவுடனும் நாயுடு நட்பு பாராட்டத் தொடங்கி விட் டார். இந்த நட்பு, ரஜினியின் ஆத்ம நண்பர் மோகன்பாபு என்பதால் அல்ல. சிரஞ்சீவியின் தீவிர எதிர்ப்பாளர் என்பதால்தான். ஆனால் மோகன்பாபு, நாயுடுவுக்காக ரஜினியிடம் அடிக்கடி பேசுகிறாராம். ‘மூன்றாவது அணிக்கே நீங்கள் போக லாமே’ என்றும் யோசனை சொல்கிறாராம். தனக்கு எதிராக சிரஞ்சீவி வருவார் என்பது உறுதியானால், ரஜினியைத் தனக்கு ஆதரவாகக் களம் இறக்குவார் நாயுடு. தற்போதைய சூழ்நிலையில், ‘சிரஞ்சீவி நிச்சயம் அரசியலுக்கு வந்தே தீருவார்’ என்று கணக்குப் போட்டு, அதனை எதிர்கொள்வதற்கு எல்லா வழிகளிலும் தன்னைத் தயார்படுத்திக் கொண் டிருக்கும் நாயுடு, இதற்காகவே நிச்சயம் ரஜினியை அரசியலுக்குள் கொண்டு வந்து சேர்ப்பார்’’ என்றார், அந்த காங்கிரஸ் தலைவர்.

இதற்கிடையில், நாயுடுவை முந்திக்கொண்டு முலாயம் சிங்குக்காக ரஜினியை மூன்றாம் அணிக்கு வரச்சொல்லி அமிதாப் பச்சன், ரஜினியுடன் பேசிக் கொண்டிருக்கிறாராம். இப்படி ரஜினிக்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் அரசியல் அழைப்புகள் வந்தவண்ணமிருக்க, ரஜினி என்ன நினைக்கிறார் என்பதை அறிய, அவரது நெருங்கிய வட்டாரங்களில் பேசினோம். ‘‘ரஜினி அரசியலுக்குக் கண்டிப்பாக வரமாட்டேன் என்று ஒருபோதும் சொன்னதில்லை. இப்போது நாயுடுவுடன் அரசியல் பேசுகிறார். தமிழக அரசியலைப் பொறுத்தவரை, கலைஞரை எதிர்த்து அவர் நிச்சயம் அரசியல் செய்ய மாட்டார்’’ என்கிறார்கள்.

இவற்றுக்கெல்லாம் பதில் கேட்டு தெலுகு தேசம் கட்சியின் மாநில ஒருங்கிணைப்புச் செயலாளர் நடிகை ரோஜாவிடம் பேசினோம். ‘‘ரஜினி சாருடனும் சிரஞ்சீவி சாருடனும் நான் பல படங்களில் ஜோடியாக நடித் திருப்பதால், இருவரைப் பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும். அவர்கள், எல்லோரிடமும் நட்பாகப் பழக வேண்டும் என்ற சுபாவம் உள்ளவர்கள். தவிர, எங்கள் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது ரஜினி தனிப்பிரியம் வைத்திருக்கிறார். அவருக்காக எந்த உதவியையும் செய்ய, எப்போதும் தயாராகவே இருப்பார் ரஜினி.

ஆந்திராவில் நடைபெற்றுவரும் காங்கிரஸ் ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். அடுத்த முதல்வர், எங்கள் தலைவர்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. எங்களது எதிரிகள் சிலர், சிரஞ்சீவி சார்ந்துள்ள சாதி சங்கங்களைத் தூண்டிவிட்டுப் பரபரப்பு கிளப்புகிறார்கள். இவற்றுக் கெல்லாம் சிரஞ்சீவி லேசில் அசைந்து கொடுக்கமாட்டார் என்பதுதான் எங்கள் கணிப்பு!’’ என்றவர்,

‘‘எங்கள் தலைவரின் மகன் யோகேஷ், இப்போது எம்.பி.ஏ. படித்து வருகிறார். பாலகிருஷ்ணாவின் மகள் பிரம்மணி பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இருவருக்கும் திருமணம் என்பது முன்பே முடிவானதுதான். இதில் அரசியலைப் புகுத்துவது தவறு!’’ என்று முடித்தார் ரோஜா.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சரான தாசரி நாராயணராவ் மூன்று வருடங்களுக்கு முன்பே, ‘சிரஞ்சீவி நிச்சயம் கட்சி தொடங்குவார், ஆட்சியைப் பிடிப்பார்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். சிரஞ்சீவியின் சாதிக்காரரான தாசரி நாராயணராவைக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் ஓரங்கட்ட, கொதித்தெழுந்தார் அவர். ‘ஆந்திர மக்களின் உரிமையையும், உணர்வையும் புரிந்துகொள்ளத் தவறியதால்தான் இங்கே ஆட்சி செய்துவந்த காங்கிரஸை ஓரங்கட்டி மண்ணின் மைந்தராக என்.டி.ஆர். உருவெடுத்தார்.

அவர் இருக்கும் வரையிலும், அவருக்குப் பின்னாலும் காங்கிரஸ் இங்கே தலைதூக்க முடியவில்லை. இப்போதும் அதே நிலை தொடர்கிறது. இப்போது என்.டி.ஆர். இல்லை. ஆனால், அவருக்கு நிகரான மகா சக்தி ஒன்று உள்ளது. அதுதான் சிரஞ்சீவி.

அவர் அரசியலுக்கு வரத் தயாராகவே இருக்கிறார். அவரோடு நாங்களும் பேசி வைத்திருக்கிறோம். அவர் அரசியலுக்கு வரவேண்டுமா, வேண்டாமா என்பதை காங்கிரஸ்தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று முழங்கத் தொடங்கினார் தாசரி நாராயணராவ். இவரது இந்த அதிரடிக்குப் பிறகு, இவருக்கு காங்கிரஸில் முழு மரியாதை கிடைத்திருக்கிறது. ஆனாலும், தொடர்ந்து சிரஞ்சீவியுடன் அவர் தொடர்பில்தான் இருக்கிறார்.

ஒருவேளை, அரசியல் சூழ்நிலைகள் வலுக்கட்டாயமாக சிரஞ்சீவியை களத்துக்கு இழுத்து வரும்போது, அவருக்கு ஆதரவுக் கரம் கோக்க தயங்க மாட்டார் தாசரி நாராயணராவ் என்கிறார்கள், இருவரையும் நன்கு அறிந்த ஆந்திர அரசியல் தலைவர்கள். ‘‘இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, மிக விரைவிலேயே ஆந்திர அரசியலில் சிரஞ்சீவி காலடி எடுத்துவைப்பார் என்பதால், அதை வைத்துத் தமிழகத்து சூப்பர் ஸ்டாரும் அரசியலில் களம் இறக்கி விடப்படுவார்’’ என்கிறார்கள், அரசியல் பார்வையாளர்கள்.

அரசியல் புயலும் இப்போது ஆந்திராவை மையம் கொண்டு இருக்கிறது!

நன்றி - ஜூனியர் விகடன்

4 comments:

Anonymous said...

ரெம்ப நல்லது!. அதன் பிறகாவது நம்மாளுக்கு கொஞ்சம் சூடு சுரணையும், தமிழர் உணர்வும் வருமா எனப் பார்க்கலாம்.


புள்ளிராஜா

Pot"tea" kadai said...

செம காமடியா இப்போ இருக்கறதவுட நல்லா தமாசா இருக்கும்.(அதும் ரஜினிக்கு நல்லா காமடி பண்ண வருமென்பது + பாய்ண்ட்)

:))))

Anonymous said...

ithu romba kevalam
naadai(country) aazhuvathtku innum nadikarkali thongi kondu iruppathu..een unmaiyaaga makkalukku uzhakikka koodiyavrkalaal adchi makiia mudiyaathu? India should change..should produce another leader like Gandhi...

Anonymous said...

அட நம்ம ஊர் அரசியல் இவ்வளவு கேவலமானதா!!!!!.....

ரஜினி, சிரஞ்சிவீன்னு celebirities எல்லாம் இப்ப தேசத் தலைவர்கள்..

இது எங்க போய் முடியும்ன்னு தெரியல...

ஜு.வி. பதிவுக்கு நன்றி..