ப.சி புள்ளி விவரமும் ஜெயாவின் காதில் வரும் புகையும்

ப.சி தரும் புள்ளி விவர டென்சன்ஜெ. பாய்ச்சல்

தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்காகவும் சுனாமி நிவாரணப் பணிகளுக்காகவும் மத்திய அரசால் அளிக்கப்பட்ட உதவிகள் குறித்து தப்பும் தவறுமாக புள்ளி விவரங்களை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டு வருவாத முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்காகவும் சுனாமி நிவாரணப் பணிகளுக்காகவும் அளிக்கப்பட்ட உதவி குறித்து தப்பும் தவறுமாக புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறார்.

சிதம்பரத்தின் பசப்பு, பாசாங்கு வார்த்தைகளால் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் வேதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்ற வலி தெரியாமல் மேட்டுக்குடி பிரபுத்துவ மன நிலையோடு பொய்க் கூற்றுக்களை வேடிக்கையாக வீசிக் கொண்டே போகிறார்.

சொன்னதையே சொல்லும் கிளிப் பிள்ளை போல தமிழக அரசுக்கு மத்திய அரசு சுனாமி நிவாரணத்துக்காக ரூ. 5,025.56 கோடி வழங்கியதாக திரும்பத் திரும்ப தவறான தகவலை பேசி வருகிறார்.

அவரது கபடத்தனத்தை நான் சட்டமன்றத்திலேயே தோலுரித்துக் காட்டினேன். தமிழக அரசு பெற்ற கடனைக் கூட மத்திய அரசு வழங்கியது மாதிரி பொய்க் கதை கட்டி வருகிறார் சிதம்பரம்.

மத்திய அரசு அளிப்பதாக உறுதியளித்த தொகை ரூ. 2,347.19 கோடி. ஆனால், தந்தது வெறும் ரூ. 820.31 கோடி மட்டுமே. இதன்மூலம் தமிழ்நாட்டை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார் சிதம்பரம்.

அதே போல சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை தமிழக அரசு ஒரு வீடு கூட கட்டித் தரவில்லை என்றும் கூறியிருக்கிறார் சிதம்பரம். ஆனால், மாநில அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இதுவரை 7,835 வீடுகளைக் கட்டி உள்ளன (தமிழக அரசு மட்டும் கட்டிய வீடுகள் எத்தனை? இதில் ஏன் தன்னார்வ நிறுவனங்கள் கட்டிய வீடுகளையும் தமிழக அரசு தனது கணக்கில் சேர்க்க வேண்டும்??) என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

சிதம்பரத்தின் பிரச்சார பாணி:

இதற்கிடையே ப.சிதம்பரம் தனது ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டத்திலும், கையில் பேப்பருடன் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்ட நிதி, கடன் தொகை, மானியம், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் கிடைக்கச் செய்த கடன் தொகை, இதில் தமிழக அரசு பயன்படுத்திய நிதி, பயன்படுத்தாத நிதி என புள்ளி விவரங்களுடன் விளக்கிக் கூறி வருகிறார்.

நர்சரி பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித் தருவது மாதிரி சிக்கலான நிதி விஷயங்களை மிக எளிøயாக விளக்கி புட்டுப் புட்டு வைத்து வருகிறார் சிதம்பரம். இது மக்களிடையே எளிதாகவும் ரீச் ஆகி வருகிறது.

குறிப்பாக கடலூர் போன்ற சுனாமி பாதித்த பகுதிகளில் பேசுகையில், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு இதுவரை ஒரு வீடு கூட கட்டித் தரவில்லை என்பதை தனது பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்தினார் சிதம்பரம். அவரது பேச்சுக்கு பெரும் வரவேற்பு இருந்தது.

ஜெ. குழப்புவது ஏன்?

இந் நிலையில் தான் ஜெயலலிதாவிடம் இருந்து பாய்ச்சல் அறிக்கை பறந்து வந்துள்ளது. ஆனால், அதில் கூட சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு கட்டிய வீடுகள் எத்தனை என்ற விவரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் தொண்டு நிறுவனங்களும் அரசும் 'சேர்ந்து' 7,935 வீடுகள் கட்டியுள்ளதாக பொத்தம் பொதுவாகவே கூறியுள்ளார் ஜெயலலிதா.

உண்மையிலேயே அரசு வீடுகளைக் கட்டித் தந்திருந்தால் அந்த எண்ணிக்கையை மட்டும் தெளிவாக, குழப்பாமல் சொல்லிவிடலாமே?

10 comments:

மாயவரத்தான் said...

சுனாமியின் போது ஜெ. அரசு உண்மையிலேயே அருமையாக செயல்பட்டது என்பது எதிர்கட்சிகளே (வேண்டாவெறுப்பாக) ஒப்புக் கொள்ளும் உண்மை. பி.எஸ்.என்.எல். சந்தா பில்லில் எப்படி கருணாநிதி படத்தை போட்டு விளம்பரம் ஆக்கிக் கொள்கிறார்களோ, அப்படியே சுனாமி மேட்டரிலும் ஜெ. தனது கட்சிக்கு சாதகமாக்கிக் கொள்ளப் பார்க்கிறார். இதில் தவறேதுமில்லை - அதையே தவறில்லை என்று பலர் ஜல்லியடித்துக் கொண்டிருக்கையில்!

மாயவரத்தான் said...

//இதில் தவறேதுமில்லை - அதையே தவறில்லை என்று பலர் ஜல்லியடித்துக் கொண்டிருக்கையில்//

அதாவது இதில் (சுனாமி விளம்பரம்) தவறில்லை - அதையே (பி.எஸ்.என்.எல் விளம்பரம்) தவறில்லை என்று பலர் ஜல்லியடித்துக் கொண்டிருக்கையில் என்று வாசிக்கவும்.

பூனைக்குட்டி said...

மொதல்ல சொன்னது இலக்கியதரமா இருந்தது. :-)

மாயவரத்தான் said...

எலக்கிய தரமா? ஹிஹி!!

Boston Bala said...

ப. சிதம்பரத்தின் பேச்சு வாக்காளர்களை எவ்வளவு தூரம் சென்றடையும் என்று தெரியவில்லை. ஆனால், நீங்கள் சொன்னது போல் ஒவ்வொரு மேடையிலும் அத்தாட்சிப் பத்திரத்துடன் மக்களுக்கு சான்றுகளை வைப்பது;

கொடுத்தது எவ்வளவு (vs) பயன்படுத்திக் கொண்டது எவ்வளவு போன்ற துல்லிய தகவல்கள் (ரகசிய காப்பு ஆவணம் அல்ல போன்ற விஷயங்களையும் சொல்லிவிட்டு) மானியங்களையும் சான்றுகளையும் விலாவாரியாக அமைதியாகப் பேசுவது...

கலர் டிவி குறித்து எதுவும் குறிப்பிடாமல், இரண்டு ரூபாய் அரிசி குறித்த கணக்கு வழக்குகளை விளக்குவது; குட்டிக் கதை, குத்தாட்டம் எல்லாம் போடாமல், இவரைப் போலவே பலரும் பேசினால், கட்சி கூட்டங்களுக்கு செல்வதே சுவாரசியத்துடன் பயனுள்ளதாக அர்த்தபூர்வமாக இருக்கும்!

பூனைக்குட்டி said...

//எலக்கிய தரமா? ஹிஹி!!//

இல்லையா பின்ன நானே மூணு தடவை படிச்சு அர்த்தம் புரிஞ்சிக்கிட்டேன்.

அப்படியிருப்பது தானே இலக்கியதரமானது இல்லையா????

----------
இலக்கியமறியாத அப்பாவி மோகன்

பூனைக்குட்டி said...

உண்மைதான் பாலா, இனிமேல் முதல் தடவையாக ப.சி பங்கேற்க்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கலாம் என்று இருக்கிறேன்.

குழலி / Kuzhali said...

//சுனாமியின் போது ஜெ. அரசு உண்மையிலேயே அருமையாக செயல்பட்டது என்பது எதிர்கட்சிகளே (வேண்டாவெறுப்பாக) ஒப்புக் கொள்ளும் உண்மை
//
மாயவரத்தான் தவறான தகவல் தருகின்றார் கடலூர் கடுமையாக சுனாமியால் பாதிக்கப்பட்டது, பாதிக்கப்பட்டதில் எங்கள் சொந்தகாரர்கள் கிராமங்களும் பல, மாயவரத்தான் சொன்ன மாதிரி அருமையாகவெல்லாம் செயல்படவில்லை என்பது அவர்கள் கூறியது, விவேக் ஓபராய் மீதும் கடலூர் மாவட்ட ஆட்சி தலைவர் மீதும் இருந்த ஒரு பாசம் வேறு யார் மீதும் சுனாமி விடயத்தில் இல்லை, மேலும் அந்த சமயத்தில் அரசின் மீது கடும் எதிர்ப்பும், தொகுப்பு வீடுகள் கட்டி தர பல கோடி ரூபாய் திட்டத்தில் விவேக் ஓபராய் கட்ட முனைந்த போது அரசாங்கம் நிலம் ஒதுக்கி தரவில்லை என்பது அங்கே இன்னமும் புகைந்து கொண்டிருக்கும் விடயம் அதிமுகவின் சேவல் குமாரை எதிர்த்து அங்கே முக்கிய பிரச்சாரமே இது தான் என்பது மாயவரத்தானுக்கு தெரியுமோ?

பூனைக்குட்டி said...

kuzhali you repeated your comment once again thats why I am not populating the identical one.

மாயவரத்தான் said...

ஸாரி குழலி. விவேக் ஓபராய் மேட்டரை சில அரசியல்வா(ந்)திகள் வேறு மாதிரி திரித்து அரசியலாக்கிவிட்டார்கள். சுனாமி வந்தவுடன் எடுக்கப்பட்ட உடனடி மீட்பு நடவடிக்கைகளிலிருந்து குடும்பத்துக்கு 1000 ரூபாய் கொடுத்தது வரை பலத்த வரவேற்பு மக்களிடமிருந்து. எனவே தான் சுனாமி பாதித்த ஏரியா என சுமார் 60 சட்டமன்ற தொகுதிகளில் எதிர்கட்சிகள் கடும் திணறலை சந்திக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே கட்சிக்காரர்கள் பேசிக் கொள்கிறார்கள். இவ்வளவு ஏன்? கடந்த இரண்டு ஆண்டுகளாக பூம்புகாரில் பாட்டளி மக்கள் கட்சியின் கவிதா ராமதாஸ் அவர்கள் அடிக்கடி விசிட் அடித்து இந்த தேர்தலில் அந்தத் தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தார். ஆனால் சுனாமி பாதிப்பில் அந்தத் தொகுதியில் போட்டியிடுவது சரியில்லை என்பதினால், கடைசியில் பெரியசாமி போட்டியிடுகிறார். இது உண்மையேயில்லை என்று அடித்துக்கூற உங்களுக்கு முழு உரிமை உண்டு குழலி.